Friday, September 29, 2006

கண்ணதாசன் vs இறைவன்

“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘பிறந்து பார்’ என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘இறந்து பார்’ என இறைவன் சொன்னான்.
‘மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்.
‘மணந்து பார்’ என இறைவன் பணித்தான்.
‘அனுபவித்தே அறிவது வாழ்வெனின்
இறைவா நீ ஏன்? என்றேன்.
இறைவன் சற்றே அருகில் வந்து
“அனுபவம் என்பதே நான் தான்” என்றான்.

கண்ணதாசனின் கவிதை வரிகள்....

Wednesday, September 27, 2006

அறிந்துக் கொள்வோமே..!



விலங்குகளில் விசித்திரமானது கங்காரு. அதற்கு நடக்கத் தெரியும், தாவத் தெரியும். ஓடத் தெரியாது. நீளம் தாண்டுதவதில் மனிதனின் சாதனையை வென்று விடும். 30 அடிகள் தாவும். ஆதன் நீண்ட தடித்த வால், தாவுதற்கேற்ற முறையில் அமைந்தது.

பிறக்கும் போது ஓர் அங்குல அளவில் இருக்கும் குட்டியை வயிற்றுப் பையில் வைத்துக் காப்பாற்றும். அக்குட்டி ஐந்து மாதங்களில் ஒன்றே முக்கால் அடியாக வளர்ந்து விடும். ஆறடி அம்மாவுக்கு ஓரங்குல குழந்தை என்னும் புதிருக்கு இதுவே விடையாகும்.

குட்டியோ எட்டாம் மாதத்தில் பையிலிருந்து வெளியே வந்து இரை தேடும். தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாய்களைப் பின்னங்கால்களால் உதைத்துச் சிதைத்து விடும்.

(மிக்க மேலானவன்)

Monday, September 25, 2006

பிளாக் பாக்சின் நிறம்..





விமான விபத்தை கண்டறிய உதவும் பிளாக் பாக்சின்
உண்மையான நிறம் மஞ்சள்.

இ. சிறீஸ்காந்தராசாவின் பல்சுவைச் சுரங்கம் நூலில் இருந்து.

Friday, September 22, 2006

தூக்கமே முக்கியம்...

உலக அரங்கத்தில் ஆங்கிலப் பேரிலக்கியத்திற்காக 1914- காலக் கட்டத்தில் பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா நோபல் பரிசைப் பெற்றிருந்தார். அச்செய்தி அவருக்கு அன்று நள்ளிரவில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் இவ்வாறு கூறினார்:

‘நான் இந்தப் பரிசைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு சாதாரண விஷயத்திற்காக என்னுடைய அருமையான உறக்கம் கெடுக்கப்பட்டிருக்க வேண்டாமே!’

ஓ…

உண்மை தான்! அதைத் இத்தருணத்திலும் வெளிப்படுத்திய ஷா உண்மையாகவே விந்தையான மனிதர் தான்!

சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள

சுவையான சம்பவங்கள்...

பாரத தேசத்தின் விடுதலை வேள்வியில் தீவிர பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவராகச் செயலாற்றிய ‘லோகமான்ய பாலகங்காதர திலகரின்’ நடவடிக்கைகளை உளவு அறிவதற்கெனப் பிரிட்டிஷ் அரசாங்கம் ரகசியப் போலீஸ்காரர் ஒருவரை அனுப்பித் திலகர் வீட்டுச் சமையல்காரராக அமர்ந்து அவரைக் கண்காணித்து வரும்படி ஆணையிட்டது.

அந்த ரகசியப் போலீஸ்காரரும் அவ்வாறே திலகர் வீட்டிலே சமையற்காரராக அமர்ந்தார்.

ஆறு மாதங்கள் ஓடி விட்டன. ஒரு நாள்..,

அந்த சமையற்காரர் திலகரிடம், ‘எஜமான், எனக்குச் சம்பளம் போதவில்லை. கொஞ்சம் உயர்த்திக் கொடுங்கள்.’ என்று வேண்டிக் கொண்டார்.

திலகர் அர்த்தச் செரிவுடனே சிரித்தார். ‘என்னப்பா, இப்படிக் குறைப்பட்டுக் கொள்கிறாயே? நான் உனக்கு மாதம் ஆறு ரூபாய் சம்பளம் தருகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கமோ உனக்கு மாதா மாதம் இருபத்திநாலு ரூபாய் சம்பளம் தருகிறது, என்னைக் கவனித்துக் கொள்வதற்கு! இன்னுமா உனக்குத் திருப்தி ஏற்படவில்லை?’ என்றார்.

அவ்வளவு தான்!

துப்பறியும் போலீஸாருக்கு வியர்த்துக் கொட்டியது, தலை குனிந்தார். அன்றிரவு வெளியே போய் விட்டுத் திரும்புவதாகச் சொல்லிவிட்டுப் போன அந்த சமையற்காரர் அப்புறம் திரும்பி வரவே இல்லை!

அரை மீசை...



உலகை அழவைத்த உறிட்லருக்கும் அரை மீசை, உலகை சிரிக்க வைத்த சார்லி சப்ளினுக்கும் அரை மீசை

இ. சிறீஸ்காந்தராசாவின் பல்சுவைச் சுரங்கம் நூலில் இருந்து.

Wednesday, September 20, 2006

குழப்பம்...

என்ன தொழில் தொடங்குவது அல்லது எவ்வாறு நம் எதிர்காலத்தை திட்டமிடுவது என்று என்னுள் ஓரு சில மாதங்கள் குழப்பமாகவே இருக்கிறது நாம் இவ்வாறு குழம்பிக் கொண்டே இருப்பது சரிதான? என்று என்னிய போது பா நந்தன் அவர்கள் எழுதிய குழப்பம்... எனும் இக் கவிதை என் கண்ணில் பட்டது அவற்றில் சில வரிகள் இங்கே

குழப்பமில்லாமல்
தத்துவங்களும் விஞ்ஞானமும் இல்லை.

ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததென்று குழம்பாவிடில்
புவிஈர்ப்பின் அவசியம் தெரிந்திருக்காது.
பறவைகள் மட்டுமேன் பறக்கின்றனவென்று குழம்பாவிடில்
விமானத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்காது.

ஆனால் இன்று நீங்கள்
குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள்.
தெளிவு என்னும் அறியாமையில்
மூழ்கி விட்டீர்கள்.

எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.
அல்லது கண்மூடித்தன்மாய் எதிர்க்கத் தொடங்கி விட்டீர்கள்.
அதனால் குட்டையைப்போல்
ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்து விட்டீர்கள்.

ஆதலால் எல்லோரும் குழம்பிக் கொண்டே இருங்கள்.
நதி போல் என்றும் பயணித்துக் கொண்டே இருங்கள்."

படித்து முடித்தவுடன் என்னுள் ஓர் தெளிவு நன்றி பா நந்தன் அவர்களே...

கவிதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Tuesday, September 19, 2006

ஹா ஹா!

புகழ் மிக்க ஆங்கிலக் கவி காலரிட்ஜிடம் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லாம்ப் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரோடு பேசிப்பழக ஆரம்பித்தார்.

ஒரு நாள்:

முன்னர் தாம் செய்த பிரசங்கங்களைச் சார்லஸ் லாம்பிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் காலரிட்ஜ். “சார்லஸ்! நான் பிரசங்கம் செய்து நீங்கள் கேட்டதில்லை தானே?” என்று வினவினார்.

சார்லஸ் லாம்ப் சொன்னார்: “உங்களிடம் நான் பிரசங்கத்தைத் தவிர வேறெதையுமே இது வரையிலும் கேட்டதில்லையே” என்றார்.

Sunday, September 17, 2006

அட அப்படியா?! பகுதி 2

மீன்களும் அதன் பயன்களும்.

பால் சுறா - நோய்களுக்கும், ஈன்ற தாய்மார்களுக்கும் பயன்மிக்கது.

நட்சத்திர மீன் - சோர்வுற்ற தசைகளைத் தூண்டக்கூடிய மருந்துப்பொருட்கள் இம்மீனிலிருந்து பெறப்படுகிறது.

திருக்கை மீன் - இம்மீனின் வாலிலுள்ள கொடுக்குப் போன்ற முள்ளின் விடம், இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுகிறது.

தேரை மீன் - இதன் உடலிலிருந்து உண்டாகும் ரசாயனப் பொருள் இரத்தத்திலுள்ள சர்க்கரையை அழித்து விடுகிறதாம்.

கடல் வெள்ளரி மீன் - புற்று நோய்க்கு மருந்து.

சிப்பிலி - இதனிலிருந்து வெளிப்படும் பொருள் இளம்பிள்ளை வாதம், இன்புளுவென்சாவுக்கு, மருந்தாகவும், இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆக்டபஸ் - இதன் உமிழ்நீர் விடமாக இருப்பினும், அதனால் இருதய நோயை குணப்படுத்த முடிகிறதாம்.

கடல் நத்தை – நோயை எதிர்க்ககூடிய ஆன்டிபயாடிக் தயாரிக்கப்படுகிறது.

கடல் முள்ளெலி - இதிலிருந்து எடுக்கப்படும் விடம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலுடையதாம்.

காட் மீன் - ஏ, டி, இ வைட்டமின்கள் கிடைக்கின்றன.

டிரங்க் மீன் - கைகால் வலிப்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது.

டூனி மீன் - நீரிழிவு நோயைப் போக்குதற்குறிய இன்சுலின் பெறப்படுகிறது.

கடல் விசிறி - இப்பிராணியிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள், குடல் புண்களைக் குணமாக்கவும் இயங்கு தசையை முடுக்கிவிடவும், ஆஸ்துமா இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

(மிக்க மேலானவன்)

Friday, September 15, 2006

அட அப்படியா?!

நீரில் வாழும் மீனினத்தில் இருபதினாயிரம் வகைகளை இறைவன் படைத்துள்ளான்.

அவை சுவை மிகுந்த உணவாகவும் பிணிகளைப் போக்கும் மருந்தாகவும் உதவுகின்றன.

பாக்டீரியாக்களையும் வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் 125 ரசாயனப் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களிலிருந்து மனித குலத்திற்குக் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். புரதம், கொழுப்பு, வைட்டமின் ஏ, டி, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாசுபரஸ், பொட்டாசியம், குளோரின் ஆகிய சத்துக்கள் மீன்களிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

ஒவ்வொரு மீனின் பயனையும் நாளை விரிவாகக் காண்போமே..!

Friday, September 08, 2006

ஹா ஹா..!

ஒரு சமயம் ஆங்கில இலக்கியத்தின் மாமேதையான ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவைத் திரையுலக நட்சத்திரம் ஒருத்தி சந்தித்தாள்

‘தாங்கள் என்னைத் திருமணம் செய்துக் கொண்டால், என்னைப் போல அழகும் உங்களைப் போன்ற அறிவும் கொண்ட பிள்ளைப் பிறக்கும் அல்லவா?’ என்றாள்.

ஷா சொன்ன பதில் இது:

‘உண்மையில் அப்படிப் பிறக்கிற குழந்தை உன் மாதிரி அறிவோடும் என் மாதிரி அழகோடும் இருந்து விட்டால், என்ன செய்வதாம்?’

சந்திக்க வந்த நடிகை சிந்தனையுடன் மௌனமாக வெளியேறினாள்.

சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள்

Wednesday, September 06, 2006

அதிசயமான ஒற்றுமை!

இந்தியப் பிரதமர் நேருஜிக்கு ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் யானை அனுப்ப வேண்டுமென்று அன்புடன் கடிதம் எழுதினார்கள்.

குழந்தை உள்ளம் படைத்த நேருஜி, உடனே அழகான யானைக் குட்டி ஒன்றை ‘இந்திரா’ என்று பெயரிட்டு, 1950-இல் அனுப்பினார். இந்த யானையை சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்ற போது நேருஜி கண்டு மகிழ்ந்தார்.

ஆனால் இந்திரா என்ற பெயர் கொண்ட அந்த யானை, அன்னை இந்திராகாந்தி நாட்டு துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில், அதே 31-10-1984 காலை ஜப்பானில் விலங்குச் சாலையில் திடீரைன்று இறந்து விட்டதாம்!

எப்படிப்பட்ட அபூர்வ ஒற்றுமை!

Tuesday, September 05, 2006

அறிந்துக் கொள்வோமே..!


கடலில் வாழ்ந்து குட்டிப் போட்டுப் பால் கொடுக்கும் உயிரினங்களுள் ஒன்று திமிங்கலம். தாயின் அடிவயிற்றில் வாயை வைத்துப் பாலருந்தும் குட்டி, ஒரு தடவைக்கு 40 லிட்டர் பால் உட்கொள்ளும்.

அதற்கொப்ப நாள்தோறும் அதன் எடை 100 கிலோ ஏறிச்செல்லும். ஒன்றரை மீட்டலிருந்து 37 மீட்டர் வரை நீலமுள்ள திமிங்கலங்கள் இருக்கின்றன. ஒரு திமிங்கலத்தின் நாக்கு மட்டும் 4 டன் எடையிருக்கும்.

ஒரு திமிங்கலத்தில் இருந்து 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும், அம்பர் என்னும் சுகந்த பொருளும் பெறலாம். ஆபத்து நேரத்தில் திமிங்கலம் எழுப்பும் ஒலி 11 கிலோ மீட்டர் வரையில் கேட்கும். அவ்வொலியைக் கேட்டுப் பிற திமிங்கலங்கள் உதவிக்கு விரைந்து வரும்.

திமிங்கலம் வாலைச் சுழற்றியடித்தால் பெரிய படகுகளும் கவிழ்ந்துவிடும். ஒரு திமிங்கலம் பத்து யானையின் எடையினை உடையது. நாக்கு மட்டும் ஒரு யானையின் எடையினைக் கொண்டது.

{நன்றி : மிக்க மேலானவன்}

Monday, September 04, 2006

பிரியும் நேரம்..!

மானிட மனம்
பிரிவை எதிர் நோக்கும்
ஒரே தருணம்.!
ஆசையாய்.,
பாசமாய்.,
ஆவலாய்.,
வளர்க்கும் பிள்ளையை – என்று
நாம் நலமாய் பிரியப் போகிறோம் - எனும்
கவலையோடு காத்திருக்கும்.,
கருவுற்ற தாய்..!

Saturday, September 02, 2006

ஹா ஹா!

சர்ச்சிலும் விஷமும்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் வெற்றிச் செல்வராக விளங்கியவர் இங்கிலாந்து நாட்டின் இணையற்றப் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு சமயம் நான்ஸி என்ற அழகி சர்ச்சிலை சந்தித்த போது, “நான் உங்களது மனைவியாக இருந்தால், நீங்கள் குடிக்கிற காஃபியில் நான் விஷத்தைக் கலந்து கொடுத்து விடுவேன்!” என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டாள்.

அவ்வளவு தான்!

மறுவினாடியே சர்ச்சில் ‘கட கட’ வென்று தமக்கே உரித்தான சிரிப்புடன் பதில் அளித்தார்! “நான் மட்டும் உன்னுடைய கணவராக இருந்திருந்தால், அந்த விஷத்தை நீ தராமலேயே நானே குடித்திருப்பேன்.”

அழகி அமைதியாக அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

Friday, September 01, 2006

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்.

மனிதனுக்குள் ஆதி முதல் இன்று வரை தேடல் என்பது அணுவிக்குள் புகுந்த கருப்பொருளாகவே உள்ளது.

மனித வாழ்க்கையே தேடல்கள் நிறைந்தது. பிறந்தது முதலே தேடல்கள் தொடங்குகின்றன, உணவுக்காக, உறவுக்காக என பலப்பல தேடல்கள்.
பக்தன் கடவுளை தேடுகிறான்,
பாமரன் உணவினை தேடுகின்றான்,
வியாபாரி பணத்தை தேடுகின்றான்,
இருப்பவன் இல்லாததை தேடுகின்றான்,
இல்லாதவன் இருப்பதை தேடுகிறான்,
ஆன்மிக வாதி உண்மைப் பொருளைத் தேடுகிறான்.
சிலர் பணத்தினைத் தேடுகிறார்கள்.
பலர் காதலினைத் தேடுகிறார்கள்.
கொஞ்சம் சிலர் நான் ஏன் பிறந்தேன், இந்த வாழ்வின் நோக்கம் என்ன?.. நான் எதை சாதிக்க வந்தேன் என்று தேடுகிறார்கள்.
யாரோ எதையோ ஒவ்வொரு நிமிடமும் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்
சில சமயங்களில் சிலத் தேடல்களுக்கு பதில் கிடைத்தாலும், ஒரு தேடல் மற்றோரு தேடலை உண்டாக்குகிறது… முடிவில்லாத தேடலில் முழ்கிப் போனவானகவே மனிதனின் வாழ்க்கை உள்ளது.

நாம் அடிக்கடி தேடலில் மூழ்கித்தான் போகிறேம். விடை தெரிவதற்கு முன்பே மீண்டும் இந்த உலகத்தின் இயந்திரச் சுழலில் ஈர்க்கப்பட்டு. வாழ்ந்து கொண்டிருக்கும்போது.. மீண்டும் அதே தேடல் மற்றொரு வடிவில்.. மற்றொரு சமயத்தில்.. என்று முடியுமோ? தெரியவில்லை.

‘ தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”..


தேடலின் பாதையில் கற்றுக்கொண்ட ஒன்று ‘தேடலுக்கு முடிவில்லை. தேடலை அனுபவித்தலே வாழ்க்கை’

சரி வாழ்கையை அனுபவிக்க் புதிய தேடல் தொடங்குவோம் வாருங்கள் நண்பர்களே.

வேறு எதையே தேடியபோது கிடைத்தவை... இவை...

கவிதையே தெரியுமா..!

என்றோ படித்தது., மனதில் பதிந்தது.!

பெண்ணே..!
நீ அரிசியாக இராதே.,
அரைத்து நசுக்கி விடுவார்கள்.
உளுந்தாக இரு.,
அரைத்தாலும் பொங்கி எழலாம்..!