Saturday, June 28, 2008

இன்னும் வளரவேண்டும்...

எனக்கு எல்லாம் இருக்கு; இதுக்கு மேல ஒண்ணும் தேவையில்லை. அப்புறம் நான் ஏன் அலட்டிக்கணும்?’’ என்று வாழ்வின் மிக உயரிய நிலையைத் தொட்டவர்களைப் போல சிலர் கேட்பது எனக்கு வியப்பைத் தருகிறது.

600 கோடி ரூபாய்க்கு வருட வர்த்தகம் செய்யும் ஒரு மிகப்பெரிய தமிழகத் தொழிலதிபரைக் கேட்டேன். ‘‘என்ன, மன நிறைவுதானே?’’ ‘‘நிச்சயம் நிறைவுதான். ஆனாலும் இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா? அடுத்த இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நகர ஆரம்பித்தாயிற்று.’’

‘‘இன்னும் வளரவேண்டும்தான். ஆனால் இதற்கு எல்லைதான் என்ன?’’

‘‘ஒரு தொழிலில் திருப்தி அடைந்துவிடுவது என்பது தேக்கம் அடைவதற்குச் சமம். தேக்கம் வந்துவிட்டால் அது சரிவின் ஆரம்பம் என்பேன்.

தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. அம்பானி சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்களேன், திருப்திதானே என்று! இன்னும் வளர்ந்தால் எத்தனையோ பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் தர என் நிறுவனம் காரணமாக இருக்குமே!’’

இப்படி அவர் மண்டைப் போடாகப் போட்ட பிறகு ஆசைதான் துன்பங்களுக்குக் காரணம் என்கிற புத்தரின் போதனையையும், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற நம் சான்றோரின் வாக்கையும் வைத்து இவரை வாதத்தில் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிற பாடல் வரிகள் 60களில் நன்கு எடுப்பட்டன. இன்று ‘உனக்கு மேலே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நீயூம் உயரு’ என்று புதுக் கவிதை பாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒகேனக்கலில் பரிசல்காரர்கள் நீரோட்டத்தை எதிர்த்து திறமையாகப் பரிசலை நகர்த்துகிறார்கள். வேகமான நீரோட்டத்திற்கு எதிராக ஒரு கைத் துடுப்பு என்ன பெரிதாகச் செய்து விடமுடியும்?

ஆனாலும் மெல்ல, அழகாக முன்னேறுகிறார்கள். இலக்கில் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். பிறகுதான் வியர்வையைத் துடைக்கிறார்கள். இப்படி நீரோட்டத்திற்கு எதிராகத் துடுப்புப் போடுவதை நிறுத்திவிட்டு சாவகாசமாக வியர்வையைத் துடைத்தால் நாம் எங்கே கொண்டு போய்த் தள்ளப்படுவோம் என்று சிந்தித்துப் பார்த்தேன்.

வாழ்விலும் இதேதான். போட்டிமயத்தில் எவ்வளவு முன்னதாகப் போனாலும் நூறாவது ஆளாக ஆகிவிடுகிற நாம், நம் போட்டி உணர்வையும் வளர்ச்சியில் காட்டும் தாகத்தையும் திருப்தியடைந்த நிலையில் ஒதுக்கிவைத்தால் நாம் எங்கே கொண்டுபோய் நிறுத்தப்படுவோம் என்று எண்ணிப் பாருங்கள்.

வளர்ச்சியில் தாகம் காட்டாத வரை இருக்கிற இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதே கடினமாகிவிடும். நாளும் படிப்படியான முன்னேற்றம். அல்லது அங்குல முன்னேற்ற மேனும். இதுதான் இந்த நிமிடத்திற்கு வேண்டிய முக்கியச் சிந்தனை.

நன்றி குமுதம்

No comments: