Friday, September 22, 2006

சுவையான சம்பவங்கள்...

பாரத தேசத்தின் விடுதலை வேள்வியில் தீவிர பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவராகச் செயலாற்றிய ‘லோகமான்ய பாலகங்காதர திலகரின்’ நடவடிக்கைகளை உளவு அறிவதற்கெனப் பிரிட்டிஷ் அரசாங்கம் ரகசியப் போலீஸ்காரர் ஒருவரை அனுப்பித் திலகர் வீட்டுச் சமையல்காரராக அமர்ந்து அவரைக் கண்காணித்து வரும்படி ஆணையிட்டது.

அந்த ரகசியப் போலீஸ்காரரும் அவ்வாறே திலகர் வீட்டிலே சமையற்காரராக அமர்ந்தார்.

ஆறு மாதங்கள் ஓடி விட்டன. ஒரு நாள்..,

அந்த சமையற்காரர் திலகரிடம், ‘எஜமான், எனக்குச் சம்பளம் போதவில்லை. கொஞ்சம் உயர்த்திக் கொடுங்கள்.’ என்று வேண்டிக் கொண்டார்.

திலகர் அர்த்தச் செரிவுடனே சிரித்தார். ‘என்னப்பா, இப்படிக் குறைப்பட்டுக் கொள்கிறாயே? நான் உனக்கு மாதம் ஆறு ரூபாய் சம்பளம் தருகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கமோ உனக்கு மாதா மாதம் இருபத்திநாலு ரூபாய் சம்பளம் தருகிறது, என்னைக் கவனித்துக் கொள்வதற்கு! இன்னுமா உனக்குத் திருப்தி ஏற்படவில்லை?’ என்றார்.

அவ்வளவு தான்!

துப்பறியும் போலீஸாருக்கு வியர்த்துக் கொட்டியது, தலை குனிந்தார். அன்றிரவு வெளியே போய் விட்டுத் திரும்புவதாகச் சொல்லிவிட்டுப் போன அந்த சமையற்காரர் அப்புறம் திரும்பி வரவே இல்லை!

No comments: